Friday 26th of April 2024

English Tamil
Advertiesment


மத்திய கலாசார நிதியத்தில் 1100 கோடி ரூபாவை அடித்த சஜித்


2020-07-30 7783

ஜனாதிபதி தேர்தலில் நிலையான கணக்கிலிருந்து 40 கோடி கரந்தார்

 



2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் மத்திய கலாசார நிதியத்திலிருந்து 1100 கோடி ரூபா மோசடி இடம்பெற்றிருப்பதாக அதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழு அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை செய்வதற்காக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக செயற்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் இந்த மூவரடங்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்ட நிலையில் 142 பக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை அந்தக் குழு நேற்று முன்தினம் பிரதமரிடம் கையளித்தது.

உரிய அனுமதி இன்றி நிலையான வைப்புகளை மீளப் பெற்றமை மற்றும் வைப்புக்கான வட்டி வருமானம் அற்றுப்போனமையினால் 2608 மில்லியன் ரூபாவும்

சட்டரீதியான அனுமதியின்றி சிசு தஹம் செவன வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணங்களுக்காக 753 மில்லியன் ரூபாவும், சுற்றுலா நுழைவுச்சீட்டுகளில் டொலர் வருமானம் ரூபாவிற்கு பரிமாற்றப்பட்ட போது ஏற்பட்ட நட்டம் 48 மில்லியன் ரூபாவும், தொல்பொருள் பொறுப்புக்காக வழங்க வேண்டிய ஒத்துழைப்பின்மையால், சட்டவிரோதமாக வேறு செயற்பாடுகளுக்காக செலவிடப்பட்ட 2266 மில்லியன் ரூபாவும், ‘அபே கம’ செயற்றிட்டத்தின் போது சொத்துக்கள் மாற்றப்பட்ட போது ஏற்பட்ட நட்டத்தால் 8 மில்லியன் ரூபாவும், முறையான அனுமதியின்றி கலாசார உதவி மற்றும் பிரதானமாக வழங்கப்பட்ட 2316 மில்லியன் ரூபாவும் நிதியத்திற்கு இல்லாமல் போயுள்ளது.

ஆட்சேர்ப்பு நடைமுறையில் அனுமதிக்கப்பட்ட வரையறைகளை மீறி, முறைசாரா ஆட்சேர்ப்பிற்காக சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக 3060 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 1059 மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குழு வெளிக்கொணர்ந்துள்ளதென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் மற்றும் துஷ்பிரயோகமான நிர்வாக மோசடிகளுக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு குழு தமது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

இதனைத் தவிர மத்திய கலாசார நிதியத்திற்கு சொந்தமாகவுள்ள டொலர் கணக்கிலும் சட்ட விரோதமாக நிதியை விடுவித்துக்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதென பிரதமர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நிலையான வைப்பில் 400 மில்லியன் ரூபாவை எவ்வித அனுமதியுமின்றி விடுவித்துக்கொண்டுள்ளதாக குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி காமினி சரத் எதிரிசிங்க, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் கோட்டாபய எதிரிசிங்க, சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹணதீர ஆகியோர் குறித்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

மேலும் 2019ஆம் ஆண்டு முழுவதிலும் முறையற்ற செலவீனங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள 2020ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி பணிப்பாளர் குழுவை அழைத்திருப்பதோடு அதில் ஐவர் மாத்திரமே கலந்துகொண்டதாகவும், கலந்துகொள்ளாத ஏனைய உறுப்பினர்களின் கையெழுத்தும் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பணிப்பாளர் குழுவின் அங்கீகாரம் குறித்து சட்டச்சிக்கல் இருப்பதாகவும் விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertiesment