ரஜினிகாந்த் நடித்து, தைப்பொங்கலை முன்னிட்டு வெளிவரவுள்ள ‘தர்பார்’ படத்தை வெளியிடுவதைத் தடை செய்யக் கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தைப்பொங்லை முன்னிட்டு எதிர்வரும் ஒன்பதாம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தர்பார் படத்துக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதில், “ ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்துக்காக லைகா நிறுவனம், 12 கோடி ரூபாவை (இந்தியப் பெறுமதி) ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டிக்குக் கடனாகப் பெற்றது. வட்டியுடன் சேர்த்து 23.70 கோடி ரூபா வழங்கும் வரை, தர்பார் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு லைகா நிறுவனம் ஜனவரி இரண்டாம் திகதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
Lanka Newsweek © 2026